இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் விருத்திமான் சாஹா, இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் கடந்த சில ஆண்டுகளாக விக்கெட் கீப்பராக செயற்பட்டு வந்தார். அண்மையில் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இவர் தேர்வு செய்யப்படவில்லை.
இந்த நிலையில் அவரை வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்ட விளையாட்டு ஊடகவியலாளர் போரியா மஜூம்தார் குறுஞ்செய்தியின் மூலம் கேலி செய்தி மிரட்டியதாக சஹா குற்றசாட்டை முன்வைத்தார். இது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையானது விருத்திமான் சாஹாவிடம் முழுமையான விசாரணை நடத்தியது. இந்த விசாரணை குறித்து பேசிய சாஹா ‘எனக்கு தெரிந்த அனைத்தையும் நான் குழுவின் முன் கூறிவிட்டேன். அந்த ஊடகர் குறித்த விவரத்தையும் தெரிவித்து விட்டேன். ஆனால் இந்த விசாரணை முடியும் வரை இது குறித்து எதுவும் பேசவேண்டாம் என பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது’ என தெரிவித்தார்.
பின்னர் போரியா மஜும்தார் என்ற அந்த பத்திரிகையாளர் தானாக முன்வந்து சாஹா உடன் நடந்த உரையாடல் குறித்து விளக்கம் அளித்து இருந்தார். இந்நிலையில் இந்த புகார் குறித்து விசாரித்த பி.சி.சி.ஐ போரியா மஜும்தார்க்கு 2 ஆண்டுகள் தடை விதித்துள்ளது. அவரால் ஊடகவியலாளர் சந்திப்பு, வீரர்களிடம் நேர்காணல் உள்ளிட்டவற்றில் கலந்துகொள்ள முடியாது என்றும் கூறியுள்ளது.